ஜோர்ஜ் ஸ்டூவர்ட் ஹெல்த் நிறுவனத்திடம் 20 பில்லியன் ரூபா நட்டஈடு கோரி MTV Channel மனு தாக்கல்

by Staff Writer 18-12-2020 | 8:04 PM
Colombo (News 1st) ஜோர்ஜ் ஸ்டூவர்ட் ஹெல்த் தனியார் நிறுவனத்திடம் 20 பில்லியன் ரூபா நட்டஈடு கோரி MTV Channel தனியார் நிறுவனம் இன்று கோரிக்கை மனு தாக்கல் செய்தது. MTV Channel தனியார் நிறுவனத்திற்கு எதிராக ஜோர்ஜ் ஸ்டூவர்ட் ஹெல்த் தனியார் நிறுவனம் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அவதூறு வழக்கு இன்று கொழும்பு மேலதிக மாவட்ட நீதிபதி சத்துரிக்கா டி சில்வா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த முறைப்பாட்டினை தள்ளுபடி செய்து, முறைப்பாட்டாளர் தரப்பு கோரியுள்ள இடைக்கால நிவாரணங்களை நிராகரிப்பதோடு, 500 வீத வழக்குக் கட்டணத்தை பெற்றுத்தருமாறு MTV Channel தனியார் நிறுவனம் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஜி.ஜி.அருள்பிரகாசம் நீதிமன்றத்தில் ஆட்சேபனைகளை முன்வத்து கோரிக்கை விடுத்தார். இதனைத் தவிர MTV Channel தனியார் நிறுவனம் தமது பதில் ஊடாக ஜோர்ஜ் ஸ்டூவர்ட் ஹெல்த் தனியார் நிறுவனத்திடம் 20 பில்லியன் ரூபா நட்டஈடு கோரி இடை மனுவொன்றையும் தாக்கல் செய்துள்ளது. ஜோர்ஜ் ஸ்டூவர்ட் ஹெல்த் தனியார் நிறுவனம் முறையற்ற விதத்திலும் குரோத மனப்பான்மையுடனும் இடைக்கால தடை உத்தரவை பெற்றுள்ளதாகவும் முறைப்பாட்டாளர் தரப்பு நீதிமன்ற செயற்பாடுகளை துஷ்பிரயோகம் செய்து தவறாகக் கையாண்டுள்ளதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் ஜோர்ஜ் ஸ்டூவர்ட் ஹெல்த் தனியார் நிறுவனம் தாக்கல் செய்துள்ள முறையற்ற, குரோத மனப்பான்மையுடன் கூடிய வழக்கு காரணமாக உள்நாட்டு, வெளிநாட்டு ஊடக நிறுவனங்கள் மத்தியில் கௌரவத்திற்கு பாத்திரமாகியுள்ள நியூஸ்ஃபெர்ஸ்ட் - MTV Channel தனியார் நிறுவனத்தின் நற்பெயருக்கு பெரும் களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் MTV Channel தனியார் நிறுவனம் தாக்கல் செய்துள்ள பதில் மூலம் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. முறைப்பாட்டாளரான நிறுவனத்தின் பணிப்பாளர் ஹப்புதந்திரிகே எரஞ்சித் ரணசிங்க என்பவர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ள சத்தியக்கடதாசியில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் போலியானவை எனவும் நன்கு அறிந்துகொண்டே நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தி ஒரு முக விளக்கத்தின் அடிப்படையிலான தடை உத்தரவை பெற்றுக்கொள்ளும் மறைமுக நோக்கத்துடன் அது சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய, ஹப்புதந்திரிகே எரஞ்சித் ரணசிங்க என்பவர் நீதிமன்றத்திற்கு போலி சத்தியக்கடதாசி சமர்ப்பித்தமை தொடர்பில் சிவில் வழக்குகள் சட்டக்கோவையின் 183-ஆ பிரிவின் கீழும் தண்டனை சட்டக்கோவையின் கீழும் குற்றச்சாட்டுகளை சுமத்தும் உரிமையை MTV Channel நிறுவனம் தன்னகத்தே கொண்டுள்ளதாகவும் MTV Channel தனியார் நிறுவனம் அறிவித்துள்ளது. இரு தரப்பினராலும் முன்வைக்கப்பட்ட விடயங்களை கவனத்திற்கொண்ட மேலதிக மாவட்ட நீதிபதி, இடைக்கால தடை உத்தரவு தொடர்பிலான இந்த வழக்கை 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தவிட்டதுடன், அன்றைய தினம் முறைப்பாட்டாளர் தரப்பு தனது பதிலை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். எவ்வாறாயினும், இடைக்கால தடை உத்தரவு நீடிக்கப்பட்டமைக்கு தமது கடும் ஆட்சேபனையை தெரிவித்த பிரதிவாதிகள் தரப்பு ஜனாதிபதி சட்டத்தரணி, இந்த விடயம் தொடர்பாக இதற்கு முன்னரும் நீதிமன்றத்திற்கு விரிவாக விடயங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார். MTV Channel தனியார் நிறுவனம் ஏற்கனவே ஆட்சேபனைகளை தாக்கல் செய்துள்ளதுடன், வழக்கு விசாரணைக்கு திகதி குறிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு பதிலளித்த ஜோர்ஜ் ஸ்டூவர்ட் ஹெல்த் தனியார் நிறுவனம் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்தார். இரண்டு தரப்பினரும் நீதிமன்றத்தில் முன்வைத்த விடயங்களை ஆராய்ந்த மேலதிக நீதவான் டிசம்பர் 30 ஆம் திகதி வரை மாத்திரம் இடைக்கால தடை உத்தரவை நீடித்ததுடன், வழக்கை மீண்டும் அன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவும் உத்தரவிட்டார். அடுத்த வழக்கு தினத்தில் வழக்கை இலக்கம் 1 மாவட்ட நீதிபதி முன்னிலையில் மாத்திரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் மேலதிக மாவட்ட நீதிபதி உத்தரவிட்டுள்ளார். வழக்கின் பிரதிவாதியான MTV Channel தனியார் நிறுவனம் சார்பில் சட்டத்தரணி ஜி.ஜி.அருள்பிரகாசத்தின் ஆலோசனையின் பேரில் ஜனாதிபதி சட்டத்தரணி உதித்த இகலஹேவா, சட்டத்தரணிகளான ஜீவந்த ஜயதிலக்க, நிரஞ்சன் அருள்பிரகாசம், தமித்த கருணாரத்ன, என்.கே.அஷோக்பரன், மியுரு இகலஹேவா உள்ளிட்ட மேலும் ஏழு சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தனர். முறைப்பாட்டாளர்கள் சார்பில் சட்டத்தரணி சனத் விஜேவர்தனவின் ஆலோசனையின் பேரில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா மற்றும் ருவந்த குரே ஆகியோர் ஆஜராகினர்.

ஏனைய செய்திகள்