இந்திய - இலங்கை ஒப்பந்தம் நடைமுறையில் இல்லை; மாகாண சபை முறைமை தேவையில்லை - சரத் வீரசேகர

by Bella Dalima 18-12-2020 | 7:40 PM
Colombo (News 1st) இந்திய - இலங்கை ஒப்பந்தம் நடைமுறையில் இல்லை என மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார். ஒரே நாடு ஒரே கொள்கை என்பதே ஜனாதிபதியின் கொள்கை என்பதால், மாகாண சபை முறைமையை எதிர்ப்பதாக சரத் வீரசேகர கூறினார். 9 மாகாணங்களாலும் 9 விதமான சட்டங்களை உருவாக்க முடியுமாயின், ஒரே நாடு ஒரே கொள்கை பொய்யாகிவிடும் என அவர் விளக்கினார். இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் படி, விடுதலைப்புலிகளை நிராயுதபாணிகளாக்குவது, மீண்டும் யுத்தம் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது, வடக்கில் வாழ்ந்த மக்களை மீள்குடியேற்றுவது ஆகிய மூன்று நிபந்தனைகளை இந்தியாவில் நிறைவேற்ற முடியாமற்போயுள்ளதாகவும் சரத் வீரசேகர தெரிவித்தார். குறித்த உடன்படிக்கை நடைமுறையில் இல்லாத நிலையில், மாகாண சபை முறைமைக்கு இணங்கி, மாகாண சபைகள் மூலமோ, அரசியலமைப்பின் மூலமோ நாட்டை எவருக்கும் வழங்கப்போவதில்லை என அவர் குறிப்பிட்டார். மாகாண சபைகள் முறைமையினால் நாட்டில் உயிர்த் தியாகம் செய்த, அங்கவீனமடைந்தவர்களுக்கு அவமரியாதை ஏற்படுவதாகவும் அவர் கூறினார். மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் சரத் வீரசேகர, அம்பாறை மாவட்ட சிவில் பாதுகாப்பு அதிகாரிகளை இன்று சந்தித்த போதே இவ்விடயங்களைக் குறிப்பிட்டார்.