Jaffna Stallions அணிக்கு பிரதமர் வாழ்த்து

by Staff Writer 17-12-2020 | 1:23 PM
Colombo (News 1st) லங்கா பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடரை வெற்றி கொண்ட Jaffna Stallions அணிக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ வாழ்த்து தெரிவித்துள்ளார். லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி ஹம்பாந்தோட்டை சூரியவெவ மைதானத்தில் நேற்றிரவு (16) நடைபெற்றது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய Jaffna Stallions அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 188 ஓட்டங்களை பெற்றது. வெற்றியிலக்கை நோக்கி களமிறங்கிய Galle Gladiators அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 135 ஓட்டங்களையே பெற முடிந்தது. போட்டியில் 53 ஓட்டங்களால் வெற்றியீட்டிய Jaffna Stallions அணி சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது. போட்டியின் நாயகனாக சொய்ப் மலிக் தெரிவானார். தொடரின் நாயகன் விருது வனிந்து ஹசரங்கவுக்கு வழங்கப்பட்டது. தொடரில் கிளிநொச்சி எக்ஸ்பிரஸ் மக்கள் சக்தியின் செபஸ்தியாம்பிள்ளை விஜயராஜ், யாழ். மாவட்ட வீரர்களான தெய்வேந்திரம் டினோஷன், கனகரத்தினம் கபில்ராஜ், விஜயகாந்த் வியாஷ்கான் ஆகியோரும் Jaffna Stallions குழாத்தில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. COVID - 19 அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் தொடரை முன்னெடுத்து வெற்றிகரமாக நிறைவு செய்த விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஷபக்ஸ, அமைச்சின் அதிகாரிகள் மற்றும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினருக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ வாழ்த்து தெரிவித்துள்ளார்.