சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட டின் மீனில் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள்

by Chandrasekaram Chandravadani 17-12-2020 | 2:13 PM
Colombo (News 1st) சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நுகர்விற்கு உதவாத டின் மீன் அடங்கிய 48 கொள்கலன்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த கொள்கலன்களில் 768 மெட்ரிக்தொன் டின் மீன் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர், மேலதிக சுங்க பணிப்பாளர் சுனில் ஜயரத்ன குறிப்பிட்டார். இவை 384 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியானவை என அவர் கூறினார். மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பொருட்கள் இந்த டின் மீன்களில் காணப்படுவதாக இலங்கை தரச்சான்றிதழ் நிறுவனம் உறுதி செய்துள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். நுகர்விற்கு பொருத்தமற்ற டின் மீன் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய, சுங்க கட்டுப்பாட்டில் காணப்பட்ட கொள்கலன்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். தனியார் நிறுவனங்கள் சிலவற்றினால் இவை இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. அதற்கமைய, இந்த கொள்கலன்களை மீள் ஏற்றுமதி செய்வதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் இன்று முதல் இந்த செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் சுங்க ஊடகப் பேச்சாளர், மேலதிக சுங்க பணிப்பாளர் சுனில் ஜயரத்ன சுட்டிக்காட்டினார்.