மனைவியை எரியூட்டியவருக்கு 10 வருட கடூழிய சிறை

மட்டக்களப்பில் மனைவியை எரியூட்டிக் கொன்றவருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை

by Staff Writer 16-12-2020 | 6:55 PM
Colombo (News 1st) மட்டக்களப்பில் தனது மனைவியை எரியூட்டி கொலை செய்த கணவருக்கு 10 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் நீதிபதி N.M.M. அப்துல்லா முன்னிலையில் இந்த வழக்கு இன்று தீர்ப்பிற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. பிரதிவாதிக்கு எதிரான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டமையால், 10 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி 28 வயதான தனது மனைவியை பிரதிவாதியான கணவர் எரியூட்டி கொலை செய்தார். சம்பவம் தொடர்பில் 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 07 ஆம் திகதி பிரதிவாதிக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு தொடுநர் சார்பில் அரச சட்டத்தரணி மாதினி விக்னேஸ்வரன் மன்றில் ஆஜராகியிருந்தார். பிரதிவாதிக்கு 10 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்த நீதிபதி, 5000 ரூபா அபராதமும் விதித்து தீர்பளித்துள்ளார். அபராதத்தை செலுத்த தவறும் பட்சத்தில் மேலும் 03 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என நீதிபதி அறிவித்துள்ளார்.