பாலியல் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம்

பாகிஸ்தானில் பாலியல் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம்: அவசர சட்டத்திற்கு இம்ரான் கான் ஒப்புதல்

by Bella Dalima 16-12-2020 | 4:15 PM
Colombo (News 1st) பாகிஸ்தானில் பாலியல் வன்கொடுமை குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு இரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்யும் தண்டனையை விதிக்கும் அவசர சட்டத்திற்கு அந்நாட்டு அதிபர் இம்ரான் கான் ஒப்புதல் தெரிவித்துள்ளார். இச்சட்டத்தின் படி, பாலியல் குற்றங்களில் ஈடுபட்டோரின் தேசிய அளவிலான பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதில் அதி தீவிர பாலியல் குற்றங்களில் ஈடுபட்டோருக்கு இரசாயன முறையிலான ஆண்மை நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. பாலியல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை உருவாக்கவும், நான்கு மாதங்களில் விசாரணைகளை நிறைவிற்குக் கொண்டுவரவும் அவசர சட்டத்தில் பிரேரிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் சமீபத்திய ஆண்டுகளாக பாலியல் வல்லுறவு சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்தன. கடந்த செப்டம்பர் மாதம் லாஹூரை நோக்கி தனது பிள்ளைகளுடன் காரில் சென்ற பெண்ணின் வாகனம் பழுதான நிலையில் வீதியில் நின்றிருந்த போது, அங்கு சென்ற கும்பல் ஒன்றால் தனது பிள்ளைகள் முன்னிலையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகினார். சில ஆண்டுகளுக்கு முன்பு 6 வயது சிறுமியை உள்ளூர் நபர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கொலை செய்தார். இடைப்பட்ட காலத்தில் தொடர்ச்சியாக பாலியல் வல்லுறவு சம்பவங்கள் அதிகரித்தன. இந்த சம்பவங்கள் நாடு முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், கடந்த மாதம் பாலியல் வன்கொடுமை குற்றங்களை தடுக்கும் நோக்கில், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை விதிக்க வகை செய்யும் அவசர சட்டத்திற்கு இம்ரான் கான் அரசு தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது. இதன்படி, தீவிர பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபருக்கு இரசாயனம் கொடுத்து அவரது ஆண்மைத்தன்மையை குறைக்கவோ நீக்கவோ செய்யும் மருந்து கொடுக்கப்படும். இது தொடர்பான முடிவை அரசு நியமித்த மருத்துவர்கள் குழு தீர்மானிக்கும். பாகிஸ்தான் பாலியல் சட்டத்தின்படி பெண்ணின் விருப்பத்திற்கு எதிராக செயற்படுவது, ஆசைக்கு இணங்காத போது வற்புறுத்தி பாலியல் செயற்பாட்டில் ஈடுபடுவது, உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்து பாலியல் செயற்பாட்டில் ஈடுபடுவது, 16 வயதிற்குட்பட்ட பெண்ணுடன் பாலியல் உறவு கொள்வது போன்றவை சட்டவிரோதமாகக் கருதப்படும். மேலும், குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் முதல் 25 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்படும். இந்தோனேஷியா மற்றும் போலந்திலும் ஆண்மை நீக்கும் சட்டம் நடைமுறையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.