புதிய சிகிச்சை நிலையங்களை ஸ்தாபிக்க தீர்மானம்

இட வசதி கொண்ட வைத்தியசாலைகளை COVID சிகிச்சை நிலையங்களாக மாற்ற தீர்மானம்

by Staff Writer 16-12-2020 | 3:49 PM
Colombo (News 1st) அதிக நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கக்கூடிய வசதிகளைக் கொண்ட வைத்தியசாலைகளை உடனடியாக சுகாதார அமைச்சு கையேற்று, அவற்றை COVID சிகிச்சை நிலையங்களாக அபிவிருத்தி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சியின் தலைமையில் இடம்பெற்ற COVID-19 தொற்று ஒழிப்பிற்கான செயலணியின் இன்றைய மீளாய்வுக்கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய சிகிச்சை நிலையங்களை ஸ்தாபிப்பதற்கான நிதியினை சுகாதார அமைச்சினூடாக ஒதுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலதிக செலவுகளை உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி நிதியம் ஆகியவற்றினூடாக பெற்றுக்கொள்ளவும் இன்றைய மீளாய்வுக்கூட்டத்தின் போது கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது. நாளாந்தம் 500 தொடக்கம் 600 வரையான கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதால், அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை வழங்குவதற்குரிய நிலையங்களை விரைவாக ஸ்தாபிக்க வேண்டியதன் அவசியம் குறித்து, இன்றைய கலந்துரையாடலின் போது அதிகக் கவனம் செலுத்தப்பட்டதாகவும் சுகாதார அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.