COVID-19: முஸ்லிம்களின் ஜனாஸாக்களை மாலைத்தீவுகளில் அடக்கம் செய்வது தொடர்பில் ஆராய்வு?

by Staff Writer 15-12-2020 | 9:59 PM
Colombo (News 1st) இலங்கையில் COVID-19 தொற்றினால் மரணிக்கும் முஸ்லிம் மக்களின் ஜனாஸாக்களை இஸ்லாமிய மார்க்கத்திற்கு அமைய மாலைத்தீவுகளில் அடக்கம் செய்வது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணிக்கும் முஸ்லிம் மக்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்த ஒத்துழைப்பு வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மாலைத்தீவுகளிடம் வேண்டுகோள் விடுத்ததாக அந்நாட்டின் வௌிவிவகார அமைச்சர் அப்துல்லாஹ் ஷாஹிட் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மாலைத்தீவுகளின் ஜனாதிபதி இப்ராஹிம் சோலி இந்த விடயம் தொடர்பில் அரச தரப்பினரின் கருத்துக்களை கேட்டறிவதற்கு நடவடிக்கை எடுப்பார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும், அமைச்சரவைக் கூட்டத்தில் அதுபோன்ற எதுவும் கலந்துரையாடப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டார். ஜனாஸாக்களை அடக்கம் செய்வது தொடர்பாக ஆராயும் பொறுப்பு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.