COVID-19 தடுப்பூசியை இலங்கைக்கு இறக்குமதி செய்வதற்கான இயலுமை தொடர்பில் நிபுணர் குழு ஆராய்வு

by Staff Writer 15-12-2020 | 9:50 PM
Colombo (News 1st) மாலைத்தீவு, சிங்கப்பூர் உள்ளிட்ட சில நாடுகள் தற்போது COVID-19 தடுப்பூசி கொள்வனவு மற்றும் அவற்றை மக்களுக்கு இலவசமாக வழங்குவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன. நான்கு தடுப்பூசிகள் தொடர்பாகக் கவனம் செலுத்தி இந்த நாட்டிற்கு உகந்த தடுப்பூசியைக் கொண்டுவரும் இயலுமையை ஆராய்ந்து பார்க்க இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே இன்று விசேட நிபுணர்கள் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். தடுப்பூசிகள் குறித்து மேலதிக விடயங்களை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு இராஜாங்க அமைச்சர் விசேட நிபுணர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். Pfizer and BioNTech தடுப்பூசியை அமெரிக்காவின் பைசர் நிறுவனம் தயாரித்துள்ளதுடன், அதன் விலை 20 அமெரிக்க டொலராகும். அதனை 70 பாகை செல்சியஸ் மறை வெப்பநிலையில் களஞ்சியப்படுத்தி வைக்க வேண்டும். Sputnik v- ரஷ்யாவின் ஔடத நிறுவனமொன்றால் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அது ரஷ்யாவில் மாத்திரமே பயன்படுத்தப்படுகிறது. அந்த தடுப்பூசி 10 அமெரிக்க டொலராகவுள்ளது. CoronaVac - சீனாவின் சினோவெக் (Sinovac ) நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அது மூன்றாம் கட்டப் பரிசோதனைகளில் உள்ளது. இது 14 முதல் 30 அமெரிக்க டொலர் பெறுமதியுடையது. பிரித்தானியாவின் ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் மற்றும் AstraZeneca நிறுவனத்தின் தயாரிப்பான தடுப்பூசியை பொதுவான குளிர்சாதனப் பெட்டியில் களஞ்சியப்படுத்தி வைக்க முடியும். அது சுமார் 4 அமெரிக்க டொலர்களாவுள்ளது.