விமானப்படையின் PT6 விமானம் விபத்து: பயிற்சி விமானி உயிரிழப்பு

by Bella Dalima 15-12-2020 | 6:10 PM
Colombo (News 1st) திருகோணமலை – சீனன்குடா விமானப்படைத் தளத்தில் இருந்து விமானியொருவருடன் பயணித்த PT 6 பயிற்சி விமானம் விபத்திற்குள்ளாகியது. அதில் பயணித்த பயிற்சி விமானி உயிரிழந்துள்ளார். விமானி மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்ததாக இலங்கை விமானப் படை பேச்சாளர் குரூப் கெப்டன் துஷான் விஜயசிங்க குறிப்பிட்டார். கெடட் தர உத்தியோகஸ்தர் ஷலிந்த அமரகோன் என்பவரே உயிரிழந்துள்ளார். இவர் கேகாலை மத்திய கல்லூரியின் பழைய மாணவர் ஆவர். 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கெடெட் அதிகாரியாக பயிற்சியை ஆரம்பித்த இவர், அந்த வருடம் ஜூலை மாதம் விமானிக்கான பயிற்சியை ஆரம்பித்திருந்தார். கந்தளாய் – சூரியபுர பகுதியில் விமானம் விபத்திற்குள்ளாகியதாக விமானப்படை பேச்சாளர் தெரிவித்தார். முன்னதாக குறித்த விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இன்று பிற்பகல் 1.05 அளவில் பயிற்சிக்காக விமானம் பயணத்தை ஆரம்பித்துள்ளதுடன், பிற்பகல் 1.15 அளவில் விமானம் தொடர்பை இழந்துள்ளது. சீனக்குடா விமானப்படைத் தளத்தில் இருந்து 14 கடல்மைல் தொலைவில் விமானம் விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து தொடர்பில் ஆராய விமானப்படை தளபதியினால் விசேட விசாரணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் தெரிவித்தார்.