by Staff Writer 15-12-2020 | 12:20 PM
Colombo (News 1st) லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊவாக்கலை பகுதியில் லொறியொன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும் 08 பேர் காயமடைந்துள்ளனர்.
பாதை அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வதற்காக சீமெந்து ஏற்றிச்சென்ற லொறியொன்று மெராயா ஊவாக்கலை பகுதியில் சுமார் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்தார்.
விபத்தில் நாகசேன மவுசாஎல்ல கீழ் பிரிவை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 32 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக லிந்துலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்து இடம்பெற்ற பகுதியில் 2 வருடங்களுக்கு முன்னர் பதிவான விபத்திலும் இருவர் உயிரிழந்துள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் மேலும் தெரிவித்துள்ளார்.