மீரிகமவில் மதுசாரம் அருந்திய இருவர் உயிரிழப்பு 

by Staff Writer 15-12-2020 | 7:05 AM
Colombo (News 1st) மீரிகம - கீனதெனிய பகுதியில் மதுசாரம் அருந்திய இருவர் உயிரிழந்துள்ளனர். மற்றுமொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர்,  பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். நால்வர் கொண்ட குழுவொன்று நேற்றிரவு மதுசாரம் அருந்தியமை தொடர்பில் தகவல் கிடைத்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். அவர்களில் இருவர் உயிரிழந்துள்ள நிலையில், சடலங்கள் மீரிகம மற்றும் வரக்காப்பொல வைத்தியசாலைகளில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். உயிரிழந்த இருவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 54 மற்றும் 47 வயதான சகோதரர்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண கூறினார். தமது தாயின் மரணச்சடங்கின் பின்னர் இவர்கள் இருவரும் மதுசாரம் அருந்தியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த சம்பவம் தொடர்பில் மீரிகம பொலிஸாரினால் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார். கிடைத்த தகவல்கள் மற்றும் சாட்சிகளுக்கமைவாக, நபர் ஒருவரால் வழங்கப்பட்ட மதுசாரத்தை அருந்திய பின்னர் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.