500 சுற்றுலா பயணிகளுக்கு மாத்திரம் அனுமதி

நாளாந்தம் 500 சுற்றுலா பயணிகளுக்கு மாத்திரம் அனுமதி

by Staff Writer 15-12-2020 | 8:06 AM
Colombo (News 1st) நாளாந்தம் 500 சுற்றுலா பயணிகளுக்கு மாத்திரமே நாட்டிற்கு வருகை தர முடியுமென சுற்றுலா மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. விமான நிலையங்களை மீள திறத்தல் மற்றும் அது தொடர்பிலான நடவடிக்கைகள் குறித்து நேற்று (14) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதனடிப்படையில், நாட்டுக்கு வருகை தரும் அனைத்து சுற்றுலா பயணிகளையும் PCR பரிசோதனைக்கு உட்படுத்தி தனிமைப்படுத்தலுக்காக ஹோட்டல்களுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்காக 58 ஹோட்டல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுற்றுலா மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு கூறியுள்ளது. குறித்த ஹோட்டல்கள், கொரோனா தொற்று கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கமைவாக முன்னெடுக்கப்படும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. சுற்றுலா பயணிகள், பதிவு செய்யப்பட்ட ஹோட்டல்கள் தவிர்ந்த ஏனைய ஹோட்டல்களை கோருமிடத்து, சுகாதார அதிகாரிகளின் பரிந்துரை அவசியமென சுற்றுலா மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், நாட்டுக்கு வருகை தரும் அனைத்து சுற்றுலா பயணிகளும் கட்டாயமாக ஒரு வார காலத்திற்கு தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டுமென அமைச்சு குறிப்பிட்டுள்ளது. மேலும், எதிர்வரும் 26 ஆம் திகதி சுகாதார தரப்பினரின் கண்காணிப்பின் கீழ் விமான நிலையங்களை மீள திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலா மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் வழமைபோன்று விமான சேவைகளை முன்னெடுக்க ஶ்ரீலங்கன் விமான நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதனிடையே, எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் மலேசியா மற்றும் சிங்கப்பூர் வரையிலான விமான பயணங்களை விஸ்தரிப்பதற்கு இலங்கை விமான சேவை திட்டமிட்டுள்ளது. பிரதி வௌ்ளிக்கிழமைகளில் கொழும்பு தொடக்கம் மலேசியாவின் கோலாலம்பூர் வரை வாராந்த விமான சேவையை முன்னெடுக்கவுள்ளதாகவும் இலங்கை விமான சேவை குறிப்பிட்டுள்ளது.