மொரோக்கோ படகு விபத்தில் சிக்கிய 2 இலங்கை இளைஞர்களில் ஒருவர் பலி

by Staff Writer 14-12-2020 | 8:12 PM
Colombo (News 1st) இலங்கையர்கள் உள்ளிட்ட சிலர் மொரோக்கோவில் இருந்து ஸ்பெயினுக்கு பயணித்த படகு விபத்துக்குள்ளானதாக தகவல் வௌியாகியுள்ளது. இந்த சம்பவத்தில் வவுனியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காணாமற்போயுள்ளதாக அவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். சுமார் 2 வருடங்களுக்கு முன்னர் மொரோக்கோவிற்கு குறித்த இளைஞர்கள் சென்றிருந்ததாக உறவினர்கள் கூறுகின்றனர். கடந்த 3ஆம் திகதிக்கு பின்னர் அவர்களுடனான தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. தாம் ஸ்பெயினுக்கு செல்லவுள்ளதாக இறுதியாக அவர்கள் குடும்பத்தாருக்கு தகவல் வழங்கியிருந்தனர். எவ்வாறாயினும், அவர்கள் பயணித்த படகு விபத்துக்குள்ளானதாக அதிலிருந்து தப்பிய ஒருவர் வவுனியாவை சேர்ந்த இளைஞர்களின் உறவினர்களுக்கு அறிவித்துள்ளார். வவுனியா - குருமன்காடு பகுதியை சேர்ந்த பிரசன்னா சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர். இதேவேளை வவுனியா - நொச்சிகுளம் பகுதியை சேர்ந்தவர் காணாமல் போயுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் உள்ள வௌிவிவகார அமைச்சு அலுவலகத்திற்கு தகவல் வழங்கியுள்ளதாகவும் விபத்தில் சிக்கிய இளைஞர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

ஏனைய செய்திகள்