பிரதேச சபை அமைதியின்மை: இருவருக்கும் பிணை

வாழைச்சேனை பிரதேச சபை அமைதியின்மை: கைதான பிரதேச சபை உறுப்பினர்கள் இருவருக்கும் பிணை

by Staff Writer 13-12-2020 | 8:04 PM
Colombo (News 1st) மட்டக்களப்பு - கோறளைப்பற்று, வாழைச்சேனை பிரதேச சபையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதேச சபை உறுப்பினர்கள் இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். பிரதேச சபை உறுப்பினர்கள் இருவரும் இன்று (13) வாழைச்சேனை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து தலா ஒரு இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு - கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையில் 2021 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் அமைதியின்மைக்கு மத்தியில் நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டது. இதன்போது காயமடைந்த ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்கள் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். சம்பவம் தொடர்பில் பிரதேச சபையின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.