தற்போதுள்ள கட்டடத்திலேயே நீதி அமைச்சு செயற்படும்

நீதி அமைச்சின் செயற்பாடுகளை தற்போதுள்ள கட்டடத்திலேயே தொடர்ந்தும் முன்னெடுக்க தீர்மானம்

by Staff Writer 12-12-2020 | 7:09 PM
Colombo (News 1st) நீதி அமைச்சின் செயற்பாடுகளை தற்போதுள்ள கட்டடத்திலேயே தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நீதி அமைச்சிற்கு உரித்தான நிறுவனங்களுக்காக புதிய கட்டடத்தை வாடகைக்கு எடுப்பதற்கான யோசனை தொடர்பில் கலந்துரையாடியதன் பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கான நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரித்ததால், இட வசதிக்கான தேவை ஏற்பட்டுள்ளதாக நீதி அமைச்சு அறிக்கையூடாக சுட்டிக்காட்டியிருந்தது. 17 நிறுவனங்களைச் சேர்ந்த 350 ஊழியர்களைக் கொண்ட அமைச்சகத்தை நீதிமன்ற வளாகத்திற்கு அருகிலுள்ள இடத்தில் நடத்திச் செல்வது முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக அடையாளம் காணப்பட்டது. நீதித்துறை வீட்டுத்திட்ட வளாகத்திற்கு அமைச்சகத்தை இடமாற்றம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள நிலையில், நிர்மாண நடவடிக்கைகள் நிறைவடையும் வரை, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு உலக வர்த்தக மையத்திற்கு அமைச்சகத்தை கொண்டு செல்லவும் எதிர்பார்க்கப்பட்டது. இதற்காக மாதாந்தம் 9.8 மில்லியன் ரூபா வாடகை செலுத்த நேரிடும். எவ்வாறாயினும், பல சுற்று பேச்சுவார்த்தைகளின் பின்னர், தற்போதுள்ள கட்டடத்தை பராமரிக்கவும், உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் விரிவாக்கத்திற்கு மாற்று இடங்களை உருவாக்கவும் நீதி அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.