மஹர : மற்றொரு கைதியின் சடலம் அடையாளம் காணப்பட்டது

மஹர சிறையில் உயிரிழந்த மற்றொரு கைதியின் சடலம் அடையாளம் காணப்பட்டது 

by Staff Writer 10-12-2020 | 11:14 AM
Colombo (News 1st) மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது உயிரிழந்த மற்றுமொரு கைதியின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதனடிப்படையில், உயிரிழந்த 11 கைதிகளில் 8 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். அமைதியின்மையின் போது மஹர சிறைச்சாலையின் சொத்துக்களுக்கு ஏற்பட்டுள்ள சேதம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதுவரையில் 228 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார். சிறையதிகாரிகள் 70 பேர், 11 வைத்தியர்கள் , 17 தாதியர்கள், 128 கைதிகளிடம் இதுவரை வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறைச்சாலையில் கலவரம் ஏற்பட காரணம் என்ன, இதற்கு தலைமை வகித்தது யார், பின்புலத்தில் செயற்பட்டவர்கள் யார் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஔிப்பதிவு காட்சிகளின் அடிப்படையிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண சுட்டிக்காட்டியுள்ளார்.