Colombo (News 1st) நாட்டில் நேற்றைய தினம் (08) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 798 பேரில் 526 பேர் கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக COVID-19 தொற்று ஒழிப்பிற்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.
கம்பஹா மாவட்டத்தில் 97 பேரும் நுவரெலியா மாவட்டத்தில் 06 பேரும் கண்டி மாவட்டத்தில் 40 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை, நேற்று கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களுள் வௌிநாட்டிலிருந்து வருகை தந்த ஒருவரும் அடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், 62 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 6,594 பேரில் நேற்று 11,182 பேருக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று காலை வரையான காலப்பகுதியில் நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 29,378 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் இதுவரையில் 142 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.