விமான நிலையங்களை விரைவில் திறக்க எதிர்பார்ப்பு 

விமான நிலையங்களை மீள திறப்பது தொடர்பில் ஆராய விசேட குழு

by Staff Writer 08-12-2020 | 8:05 AM
Colombo (News 1st) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை திறப்பது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கை எதிர்வரும் முதலாம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளதாக விமான சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டீ.வி. சானக தெரிவித்தார். சுகாதார நடைமுறைகளுடன் சுற்றுலா பயணிகளுக்காக விமான நிலையங்களை எவ்வாறு திறப்பது என்பது தொடர்பில் தற்போது ஆராயப்பட்டுவருவதாக அவர் கூறினார். அதேபோன்று, வௌிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வருவதற்காக தனியான திட்டமொன்றை வகுப்பது தொடர்பிலும் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் கூறினார். இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட குழுவினால் சமர்ப்பிக்கப்படும் அறிக்கைக்கு அமைவாக, விமான நிலையங்களை திறப்பதற்கான திகதி தொடர்பில் தீர்மானிக்கப்படுமென விமான சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டீ.வி. சானக தெரிவித்தார். எது எவ்வாறாயினும், கூடிய விரைவில் விமான நிலையங்களை திறப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.