மஹர சிறைக் கலவரம்: நிபுணர் குழு முன்னிலையில் 11 கைதிகளின் பிரேத பரிசோதனை

by Staff Writer 08-12-2020 | 6:53 PM
Colombo (News 1st) மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தின் போது உயிரிழந்த கைதிகளின் பிரேத பரிசோதனையை நிபுணர் குழாம் முன்னிலையில் மேற்கொள்ள இணக்கம் காணப்பட்டுள்ளது. சட்ட மா அதிபர் திணைக்களமும் பாதிக்கப்பட்டோர் தரப்பினரும் வத்தளை நீதவான் நீதிமன்றத்தில் இன்று மாலை இந்த இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளனர். கடந்த 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தின் போது உயிரிழந்த 11 கைதிகளின் பிரேத பரிசோதனையை மூன்று சட்ட வைத்திய அதிகாரிகள், அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் துப்பாக்கிகள் தொடர்பான நிபுணர் ஒருவர், தடயவியல் ஆய்வு நிலையத்தின் வைத்தியர் ஒருவர் உள்ளிட்ட நிபுணர் குழாம் முன்னிலையில் மேற்கொள்ள இதன்போது இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இந்த நிபுணர்களின் பெயர் பட்டியலை நாளைய தினம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு வத்தளை நீதவான் புத்திக ஶ்ரீ ராகல சட்ட மாஅதிபருக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கு எதிர்வரும் 11 ஆம் திகதியே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்தது. எனினும், சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்ட நகர்த்தல் பத்திரத்திற்கு அமைய இந்த வழக்கு விசாரணை இன்று மாலை இடம்பெற்றது.