பிறந்து 20 நாட்களேயான சிசு கொரோனாவால் உயிரிழப்பு

பிறந்து 20 நாட்களேயான சிசு கொரோனா தொற்றால் உயிரிழப்பு

by Staff Writer 08-12-2020 | 10:12 PM
Colombo (News 1st) COVID-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்ட, பிறந்து 20 நாட்களேயான சிசு சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளது. கொழும்பு -15 முகத்துவாரம் பகுதியை சேர்ந்த சிசு ஒன்றே COVID-19 தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ஜீ.விஜயசூரிய குறிப்பிட்டார். கொரானா தொற்றுக்குள்ளான குறித்த சிசு இன்று காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், சிசுவின் தாய்க்கும் தந்தைக்கும் COVID-19 தொற்று ஏற்படவில்லை என சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ஜீ.விஜயசூரிய தெரிவித்தார். இதேவேளை, நாட்டில் COVID-19 தொற்றுக்குள்ளான 454 பேர் குணமடைந்துள்ளனர். அதற்கமைய, குணமடைந்தோரின் எண்ணிக்கை 21, 258 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் இதுவரை 28,580 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 7,180 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை COVID-19 தொற்றுக்குள்ளாகி 142 பேர் உயிரிழந்துள்ளனர்.