ஆரையம்பதியில் ஒருவரை கொலை செய்தவருக்கு கடூழிய சிறை

ஆரையம்பதியில் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்தவருக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை

by Staff Writer 08-12-2020 | 4:32 PM
Colombo (News 1st) மட்டக்களப்பு - ஆரையம்பதி பகுதியில் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்தவருக்கு 07 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி D.S.சூசைதாஸ் இன்று இந்த தீர்ப்பை வழங்கினார். 2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 08 ஆம் திகதி ஆரையம்பதியில் 31 வயதான ஆண் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். சம்பவம் தொடர்பில் 2016 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் சட்ட மா அதிபரால் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. பிரதிவாதிக்கு எதிரான குற்றச்சாட்டு தொடர்பான சமர்ப்பணங்கள் நிறைவுபெற்ற நிலையில், 07 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிக்கு 5000 ரூபா தண்டப்பணம் விதித்த நீதிபதி, அதனை செலுத்த தவறும் பட்சத்தில் மேலும் ஒரு மாத சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என அறிவித்துள்ளார். கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்திற்கு 05 இலட்சம் ரூபா நட்ட ஈடு செலுத்த வேண்டும் எனவும், அதனை செலுத்தத் தவறும் பட்சத்தில் மேலும் 06 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.