அரசியல் பழிவாங்கல் தொடர்பான விசாரணையின் இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

by Staff Writer 08-12-2020 | 3:59 PM
Colombo (News 1st) அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதியரசர் உபாலி அபேரத்னவினால் அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது. மூன்று அத்தியாயங்களாக அச்சிடப்பட்டுள்ள இந்த அறிக்கை 2000 பக்கங்களைக் கொண்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி முதல் 2019 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அரச மற்றும் தனியார் கூட்டு நிறுவனங்களில் இடம்பெற்ற அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராய்ந்து தகவல்களை திரட்டுவதற்காக இந்த ஆணைக்குழு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக நியமிக்கப்பட்டது. ஓய்வுபெற்ற நீதியரசர் உபாலி அபேரத்னவின் தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஓய்வுபெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சந்திர ஜயதிலக்க மற்றும் ஓய்வுபெற்ற பொலிஸ் மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ ஆகியோர் உறுப்பினர்களாக செயற்பட்டனர்.