by Staff Writer 08-12-2020 | 1:34 PM
Colombo (News 1st) தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கு தொடர்பிலான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாமையின் காரணமாக, வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 11ஆம் திகதி வரை ஒத்திவைத்து மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி டி. சூசைதாசன் இன்று (08) உத்தரவிட்டார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பில் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சித் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்த ராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம், இராணுவப்புலனாய்வு உத்தியோகத்தர் எம். கலீல் மற்றும் முன்னாள் இராணுவ சிப்பாயான மதுசங்க ஆகியோர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கம், 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 ஆம் திகதியன்று மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் நத்தார் நள்ளிரவு ஆராதனையில் கலந்துகொண்டிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.