Burevi சூறாவளி திருகோணமலையிலிருந்து 240KM தொலைவில்

'Burevi' சூறாவளி திருகோணமலையிலிருந்து 240 கி.மீ தூரத்தில்...

by Chandrasekaram Chandravadani 02-12-2020 | 11:01 AM
Colombo (News 1st) தென்மேற்கு வங்காள விரிகுடாவில் வலுவடைந்துள்ள Burevi சூறாவளியானது, திருகோணமலையிலிருந்து தென் கிழக்காக 240 கிலோமீற்றர் தூரத்தில் இன்று (02.12.2020 - 9.30 AM) நிலைகொண்டுள்ளது. இதன் காரணமாக 80 - 90 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. இந்த சூறாவளி கிழக்கு கரையோரத்திலிருந்து மேற்கு நோக்கி மன்னார் வளைகுடாவினூடாக வெளியேறும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதேநேரம், Burevi சூறாவளியின் காரணமாக இன்று (02.12.2020) வடக்கு, வட மத்திய, கிழக்கு, வட மேற்கு, மேற்கு, மத்திய மற்றும் சபரகமுவ ஆகிய மாகாணங்களில் 80 - 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. இவை தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் 60 முதல் 70 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். இதேவேளை, Burevi சூறாவளியின் காரணமாக இன்று (02.12.2020) வடக்கு, வட மத்திய, கிழக்கு மற்றும் வட மேல் ஆகிய மாகாணங்களில் 200 மி.மீ. வரையான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. 2000 ஆம் ஆண்டின் பின்னர் சுமார் 20 வருடங்களின் பின்னர் இந்த வருடம் சூறாவளியானது இலங்கையை ஊடறுத்து வீசுகின்றமை குறிப்பிடத்தக்கது.