தனஞ்சய டி சில்வாவின் தந்தை கொலை வழக்கு; சந்தேக நபர் கைது 

by Staff Writer 01-12-2020 | 8:46 AM
Colombo (News 1st) கிரிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தை ரஞ்சன் சில்வாவின் கொலையுடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபர் ஒருவர் அபுதாபியில் சர்வதேச பொலிஸாரினால் இன்று (01) கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையினால் சர்வதேச பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவல்களுக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரபல கிரிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தை ரஞ்சன் டி சில்வா 2018 மே மாதம் 14 ஆம் திகதி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவத்தின் முக்கிய குற்றவாளி தர்மசிறி பெரேரா என்பவரென விசாரணைகளினூடாக தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். கொலை சம்பவத்தை தொடர்ந்து அவர் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு தப்பிச் சென்றது தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறினார். சந்தேக நபர் தொடர்பில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.