கொரோனா ; தகனத்திற்கு எதிரான மனுக்கள் நிராகரிப்பு

கொரோனாவால் உயிரிழப்போரின் தகனத்திற்கு எதிரான மனுக்கள் நிராகரிப்பு  

by Staff Writer 01-12-2020 | 4:11 PM
Colombo (News 1st) COVID -  19 தொற்றுக்குள்ளாகி உயிரிழப்போரின் சடலங்களை எரிக்க வேண்டும் என நிபந்தனை விதித்து சுகாதார அமைச்சரினால் வெளியிடப்பட்ட வர்த்தமானியை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாது தள்ளுபடி செய்யவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியசர்களான முர்து பெர்னாண்டோ ப்ரீதி பத்மன் சூரசேன ஆகியோரால் இந்த மனுக்கள் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி சுகாதார அமைச்சரினால் வௌியிடப்பட்ட வர்த்தமானியை ஆட்சேபனைக்கு உட்படுத்தி 12 அடிப்படை உரிமை மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. மூவரடங்கிய நீதியரசர்கள் குழாமின் பெரும்பான்மையானோரின் தீர்மானத்திற்கு அமைய இந்த மனுக்களை தள்ளுபடி செய்வதாக மனுக்கள் மீதான பரிசீலனையின் நிறைவில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய அறிவித்தார். இந்த மனுக்கள் அனைத்தையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாது நிராகரிக்குமாறு சட்ட மா அதிபர் சார்பில் மன்றில் ஆஜராகிய பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே மற்றும் இடைமனு தாரர்கள் சார்பில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன உள்ளிட சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்தனர். முஸ்லிம் மற்றும் கத்தோலிக்க பிரஜைகள் மாத்திரமின்றி அனைத்து மதத்தவரும் தங்களின் மத கடமைகளை பின்பற்றுவதற்கு காணப்படும் உரிமையை தாம் மதிப்பதாகவும் எனினும் கொரோனா போன்ற மிக கடுமையான தொற்றுநோய் ஏற்படுவதை தடுத்து நாட்டு மக்களின் சுகாதாரத்தை பாதுகாப்பதற்காக சுகாதார அமைச்சரினால் விதிக்கப்பட்ட நிபந்தனைகள் சட்டபூர்வமானது என்பதால் அதனை ஆட்சேபனைக்கு உட்படுத்த முடியாது எனவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழாம் உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.  

ஏனைய செய்திகள்