முகக் கவசங்களுக்கு கட்டுப்பாட்டு விலை

முகக் கவசங்களுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிப்பது தொடர்பில் அவதானம்

by Staff Writer 30-11-2020 | 1:18 PM
Colombo (News 1st) முகக் கவசங்களுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஔடத உற்பத்தி விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சின் செயலாளர் ரோஹித்த உடுமாவல தெரிவித்துள்ளார். இதற்கிணங்க, சர்ஜிக்கல் முகக் கவசங்களுக்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் முகக் கவசங்களை இறக்குமதி செய்வதை குறைக்கவும் திட்டமிட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் உள்நாட்டு உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், உள்நாட்டு ஔடத உற்பத்தியை அதிகரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போது 15 வீதமாக காணப்படும் உள்நாட்டு ஔடத உற்பத்தியை 40 வீதம் வரை அதிகரிப்பது அரசாங்கத்தின் நோக்கம் என ஔடத உற்பத்தி விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சின் செயலாளர் ரோஹித்த உடுமாவல தெரிவித்துள்ளார். ஔடத உற்பத்திக்காக தொழிற்சாலையொன்றை நிர்மாணிப்பதற்காக ஹம்பாந்தோட்டையில் 400 ஏக்கரில் காணி தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.