மணல் டிப்பர் மோதி பொலிஸ் கான்ஸ்டபிள் உயிரிழப்பு: சாரதி கைது

by Bella Dalima 29-11-2020 | 2:59 PM
Colombo (News 1st) குருநாகல் - கொப்பேகன பகுதியில் மணல் டிப்பர் மோதி பொலிஸ் கான்ஸ்டபிள் உயிரிழந்தமை தொடர்பில் 27 வயதான லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். நிக்கவரெட்டிய பகுதியில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார். ஹாத்தலவ பகுதியில் சட்டவிரோத மணற்கடத்தலை சுற்றிவளைப்பதற்காக 05 பொலிஸ் உத்தியோகத்தர்கள் சென்றிருந்தனர். இதன்போது, அவர்களில் ஒருவர் மணல் டிப்பரை நிறுத்த முயன்ற போது, லொறியை சாரதி நிறுத்தாமல் சென்றுள்ளார். இதன்போது, பொலிஸ் உத்தியோகத்தர் மீது டிப்பர் மோதியுள்ளது. நேற்று நள்ளிரவு 12 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். சம்பவத்தில் பலத்த காயமடைந்த 32 வயதான பொலிஸ் கான்ஸ்டபிள் நிக்கவெரட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, அவர் உயிரிழந்திருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். பொலிஸ் கான்ஸ்டபிள் மீது மோதிய டிப்பர் நிக்கவெரட்டிய பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.  

ஏனைய செய்திகள்