Fitch: தரமிறக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது

Fitch மதிப்பீட்டின் பிரகாரம் தரமிறக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது: நிதி அமைச்சு அறிக்கை

by Staff Writer 28-11-2020 | 10:39 PM
Colombo (News 1st) இலங்கையின் நீண்டகால கடன் Fitch மதிப்பீட்டின் (Fitch Ratings) பிரகாரம், C.C.C வரை தரமிறக்குவது தொடர்பில் நிதி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் புதிய அரசாங்கத்தின் வலுவான கொள்கைக் கட்டமைப்பை அடையாளம் காணத் தவறியதால், தரமிறக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என நிதியமைச்சு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடன் தொடர்பில் 2021 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட யோசனைகள் குறித்து Fitch நிரல்படுத்தலில் கவனத்திற்கொள்ளப்படவில்லை என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போதைய நிதி நிலைமையை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கம் அதன் எதிர்கால நிதி மதிப்பீட்டை விட பின்தங்கியுள்ளதாக பிட்ச் தரப்படுத்தலில் குறிப்பிடப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் Fitch தரவரிசையில் பாரபட்சமற்ற அணுகுமுறையைக் காட்டுகின்றன. எதிர்காலத்தில் முன்னெடுப்பதற்கு உறுதிபூண்டுள்ள மாற்றுத் திட்டங்கள் குறித்து அரசாங்கம் சரியான கவனம் செலுத்தவில்லை என அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடன் அபாயத்தைக் காரணம் காட்டி இலங்கையை B-Negative மதிப்பீட்டிலிருந்து C.C.C மதிப்பீட்டிற்கு Fitch தரவரிசை நேற்று தரமிறக்கியது.