தூத்துக்குடியில் இலங்கையர்கள் அறுவர் கைது

தூத்துக்குடியில் போதைப்பொருட்களுடன் இலங்கையர்கள் அறுவர் கைது

by Staff Writer 28-11-2020 | 5:49 PM
Colombo (News 1st) இந்தியாவின் தூத்துக்குடி கடற்பகுதியில் ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் 6 பேர் மதுரை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி கடல் எல்லையில் இந்திய கடலோர காவல்படையினர் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போதே இலங்கையர்கள் 6 பேரும் கைது செய்யப்பட்டிருந்தனர். தூத்துக்குடி - வாழைத்தீவு கடல் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் சென்ற படகை கடலோர காவல் படையினர் சுற்றிவளைத்து சோதனையிட்டுள்ளனர். இதன்போது, படகில் 100 கிலோகிராம் ஹெராயின் மற்றும் கைத்துப்பாக்கிகளை தமிழக கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இலங்கையர்களை தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து, 6 நாட்கள் மதுரை மத்திய சிறையில் தடுப்புக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.