கொரோனாவால் இதுவரை 107 பேர் உயிரிழப்பு

கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 107 ஆக அதிகரிப்பு

by Staff Writer 28-11-2020 | 12:04 PM
Colombo (News 1st) நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் 08 கொரோனா மரணங்கள் பதிவானதையடுத்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. கொழும்பு 13 ஐ சேர்ந்த 87 வயதான பெண்ணொருவர் கடந்த 23 ஆம் திகதி தனது வீட்டில் உயிரிழந்துள்ளார். பக்கவாதம் மற்றும் கொரோனா தொற்றுடன் ஏற்பட்ட மாரடைப்பினால் அவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு - 09 தெமட்டகொடையை சேர்ந்த 54 வயதான மற்றுமொரு பெண்ணும் உயிரிழந்துள்ளார். புற்றுநோயுடன் அதிகரித்த COVID-19 நிமோனியா காரணமாக அவர் உயிரிழந்துள்ளார். இதனிடையே, மருதானையை சேர்ந்த 78 வயதான பெண்ணொருவர் கடந்த 25 ஆம் திகதி தனது வீட்டில் உயிரிழந்துள்ளார். COVID-19 உடன் ஏற்பட்ட மாரடைப்பே அவரது மரணத்திற்கான காரணமென அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு - 15 ஐ சேர்ந்த 36 வயதான ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து IDH வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் நேற்று உயிரிழந்துள்ளார். நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, கொழும்பு 02 ஐ சேர்ந்த 83 வயதான ஆண் ஒருவர், நேற்று முன்தினம் அவரது வீட்டில் உயிரிழந்துள்ளார். COVID-19 தொற்றுடன் ஏற்பட்ட மாரடைப்பே அவரது மரணத்திற்கான காரணமென அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு - 10 மாளிகாவத்தையை சேர்ந்த 58 வயதான பெண்ணொருவரும் நீரிழிவு மற்றும் COVID-19 காரணமாக தனது வீட்டில் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். கொழும்பு - 13 ஐ சேர்ந்த 69 வயதான ஆண் ஒருவர், கடந்த 25 ஆம் திகதி வீட்டில் உயிரிழந்துள்ளார். பக்கவாதம் மற்றும் ஆஸ்த்துமாவுடன் ஏற்பட்ட COVID-19 நிமோனியாவினால் அவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் இருந்த 70 வயதான ஆண் ஒருவர் கடந்த 25 ஆம் திகதி சிறைச்சாலை வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். சிறுநீரக நோயுடன் ஏற்பட்ட COVID-19 தொற்றே இவரது மரணத்திற்கான காரணமென அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த தரவுகளின் அடிப்படையில், நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நேற்றைய தினம் கொரோனா நோயாளர்கள் 472 பேர் அடையாளங் காணப்பட்டனர். இவர்கள் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் ஆவர். நாட்டில் இதுவரை COVID-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 22,501 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே, கொரோனா தொற்றில் இருந்து 410 பேர் நேற்று குணமடைந்தனர். இதற்கிணங்க, குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16,226 ஆக அதிகரித்துள்ளது. தொற்றுக்குள்ளானோரில் 6,168 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.