COVID-19 தொற்றினால் மேலும் இரண்டு மரணங்கள்

COVID-19 தொற்றினால் மேலும் இரண்டு மரணங்கள்

by Staff Writer 26-11-2020 | 11:59 AM
Colombo (News 1st) இலங்கையில் COVID-19 தொற்றினால் நேற்று (25) மேலும் 2 மரணங்கள் பதிவாகியுள்ளன. இதனடிப்படையில், நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 96 ஆக பதிவாகியுள்ளது. கொழும்பு 12 மற்றும் பன்னிப்பிட்டிய பகுதிகளை சேர்ந்தவர்களே தொற்றினால் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு 12 ஐ சேர்ந்த, 45 வயதான பெண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். பக்கவாதம் மற்றும் COVID-19 தொற்று காரணமான அதிக இரத்த அழுத்தத்தினால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. பன்னிப்பிட்டிய பகுதியை சேர்ந்த 80 வயதான ஆண் ஒருவர் ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையிலிருந்து COVID-19 தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, பிம்புர ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு உயிரிழந்துள்ளார். அவரது மரணத்திற்கான காரணம் COVID-19 தொற்றுடன் கல்லீரல் தொற்று உக்கிரமடைந்தமையாகும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 21,469 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் 502 பேர் தொற்றுடன் அடையாளங்காணப்பட்டனர். இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 15,447 ஆக அதிகரித்துள்ளது. தொற்றுடன் அடையாளங் காணப்பட்டோரில் 5 ,926 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேவேளை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்கின்றது. பெருமளவான நோயாளர்கள் இல்லாவிடினும், குறிப்பிடத்தக்க அளவு நோயாளர்கள் பதிவாவதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். குறித்த பகுதிகளை தனிமைப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு நகரில் தற்போது பதிவாகும் நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.