தமிழகக் கரையைக் கடந்தது நிவர் புயல்

தமிழகக் கரையைக் கடந்தது நிவர் புயல்

by Bella Dalima 26-11-2020 | 12:26 PM
Colombo (News 1st) நிவர் புயல் முழுவதுமாக கரையைக் கடந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மணித்தியாலத்திற்கு 135 கிலோமீட்டர் வேகத்தில் புயல் தமிழகம் மற்றும் புதுச்சேரி கரையைக் கடந்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் ஒன்றரை இலட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். புயல் காரணமாக இன்றைய தினமும் தமிழகத்தில் அரச விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. பலத்த மழை மற்றும் கடும் காற்று காரணமதாக சென்னை விமான நிலையம் மூடப்பட்டுள்ளதுடன், மெட்ரோ ரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. புயலின் தாக்கத்தினால் இன்றும் பல பகுதிகளில் பலத்த மழை வீழ்ச்சி பதிவாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நிவர் புயலால் பாதிப்பு ஏற்படவில்லை என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். பலத்த மழை நீடிக்கும் என்பதால், மக்கள் வீடுகளிலேயே இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புயலின் தாக்கத்தினால் இரண்டு தினங்களுக்கு முன்னர் அமுல்படுத்திய 144 தடைச்சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது. இதுவரை நிவாரண முகாம்களில் 2000-க்கும் மேற்பட்டோர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.