போதைப்பொருள் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு

பொலிஸ் போதைப்பொருள் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு 

by Staff Writer 24-11-2020 | 6:01 PM
Colombo (News 1st) கைது செய்யப்பட்டுள்ள பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவு அதிகாரிகள் 13 பேரையும் எதிர்வரும் 7ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் மொஹம்மட் மிஹாயில் இன்று (24) உத்தரவிட்டுள்ளார். சந்தேக நபர்கள் 13 பேருக்கு எதிராக போதைப்பொருள் கடத்தியமை மற்றும் தம்வசம் வைத்திருந்தமை உள்ளிட்ட போதைப்பொருள் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்வதற்கான சட்ட ஏற்பாடுகள் இல்லையென சந்தேக நபர்கள் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணிகள் முன்வைத்த அடிப்படை ஆட்சேபனையை கொழும்பு பிரதம நீதவான் நிராகரித்துள்ளார். தமது சேவை பெறுநர்கள் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்தமை மற்றும் அவர்கள் போதைப்பொருளை கடத்தியமைக்கு போதிய சாட்சியமில்லை என்பதால் அவர்களை பிணையில் விடுவிக்கும் அதிகாரம் நீதவான் நீதிமன்றத்திற்கு உண்டு என தெரிவித்து சந்தேக நபர்கள் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணிகள் முன்வைத்த அடிப்படை ஆட்சேபனையை நிராகரித்த நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார். சந்தேக நபர்களான பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவு அதிகாரிகள், போதைப்பொருள் கடத்தற்காரர்களிடமிருந்து பறிமுதல் செய்த போதைப்பொருள் மற்றும் சர்வதேச கடற்பரப்பில் இருந்து கொண்டுவரப்பட்ட போதைப்பொருட்களை மொத்தமாகவும் தனிப்பட்ட வாகனங்களையும் பயன்படுத்தி நாட்டின் பல பகுதிகளிலுள்ள போதைப்பொருள் கடத்தற்காரர்களுக்கு வழங்கியதன் மூலம் பல இலட்சம் ரூபா பணத்தை பெற்றுக்கொண்டமை, அவர்களுடன் பணிபுரிந்த அதிகாரிகளே வழங்கிய சாட்சிகளின் ஊடாக தெரியவருவதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப்ப பீரிஸ் மன்றில் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த விடயங்களை ஆராய்ந்த பிரதம நீதவான் விளக்கமறியலை நீடித்து உத்தரவிட்டுள்ளார்.