பிள்ளையான் உள்ளிட்ட ஐவருக்கு பிணை 

by Staff Writer 24-11-2020 | 2:32 PM
Colombo (News 1st) தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கின் சந்தேக நபர்களான பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட ஐவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் இன்று (24) சந்தேக நபர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த பிணை விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே சந்தேக நபர்களை பிணையில் விடுவிக்க நீதிபதி டீ. சூசைதாசன் உத்தரவிட்டுள்ளார். ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப்பிணைகளில் சந்தேக நபர்கள் ஐவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பில் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சித் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்த ராஜா கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் இராணுவப்புலனாய்வு உத்தியோகத்தர் எம். கலீல் முன்னாள் இராணுவ சிப்பாயான மதுசங்க ஆகியோர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கம் 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 ஆம் திகதியன்று மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் நத்தார் நள்ளிரவு ஆராதனையில் கலந்துகொண்டிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கு எதிர்வரும் டிசம்பர் 8ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.