நியூஸ்பெஸ்ட்டின் சந்திரமதி குழந்தைவேலின் பூதவுடல் நல்லடக்கம்

by Staff Writer 23-11-2020 | 6:45 PM
Colombo (News 1st) நியூஸ்பெஸ்ட்டின் காலஞ்சென்ற ஊடகவியலாளர் சந்திரமதி குழந்தைவேலின் பூதவுடல் கண்டி கந்தகெடிய பொது மயானத்தில் இன்று (23) பிற்பகல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதி வரை ஊடத்துறைக்காக பணியாற்றிய சந்திரமதி குழந்தைவேல் திடீர் சுகயீனம் காரணமாக கடந்த வௌ்ளிக்கிழமை நள்ளிரவு இவ்வுலகை விட்டுப் பிரிந்தார். அன்னாரது பூதவுடல் புஞ்சி பொரளையிலுள்ள தனியார் மலர்சாலையில் நேற்றிரவு அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. இதன்போது ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலர் இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர் கந்தகெடிய கீழ் பிரிவில் உள்ள அன்னாரின் வீட்டுக்கு பூதவுடல் எடுத்துச் செல்லப்பட்டது. இன்று பிற்பகல் நடைபெற்ற இறுதிக் கிரியைகளின் பின்னர் சந்திரமதி குழந்தைவேலின் பூதவுடல் கந்தகெடிய கீழ் பிரிவு மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு நல்லடக்கம் செய்யப்பட்டது. அமரர் சந்திரமதி குழந்தைவேலுக்கான அஞ்சலி நிகழ்வு மட்டு ஊடக அமையத்தில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் அமரர் சந்திரமதிக்கு விளக்கு ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.