சில அமைச்சுக்களின் விடயதானங்களில் திருத்தம்...

சில அமைச்சுக்களின் விடயதானங்கள் திருத்தப்பட்டு விசேட வர்த்தமானி

by Staff Writer 23-11-2020 | 2:57 PM
Colombo (News 1st) சில அமைச்சுக்களின் விடயதானங்கள் திருத்தியமைக்கப்பட்டு விசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. கடந்த வௌ்ளிக்கிழமை வௌியிடப்பட்ட இந்த வர்த்தமானியில் புதிதாக 2 அமைச்சுக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. தொழில்நுட்பம் மற்றும் மக்கள் பாதுகாப்பு அமைச்சு என்பனவே புதிய அமைச்சுக்களாகும். இதுவரை உள்ளக பாதுகாப்பு, பொதுநிர்வாகம் மற்றும் இடர்முகாமைத்துவ மற்றும் இராஜாங்க அமைசச்சுக்களின் கீழ் இருந்த பொலிஸ், சிவில் பாதுகாப்பு திணைக்களம் என்பன மக்கள் பாதுகாப்பு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. பாதுகாப்பு அமைச்சின் கீழிருந்த ஆட்பதிவு திணைக்களம் தொழில்நுட்ப அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. ஜனாபதிபதியின் கீழுள்ள தேசிய முக்கியத்துவம் வாய்ந்த சில விடயதானங்களிலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி முப்படை உறுப்பினர்கள், கொரோனா தொற்றுக்குள்ளாவதை தடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணி, பாதுகாப்பான நாடு, ஒழுக்கமுள்ள மற்றும் சட்டத்தை மதிக்கும் சமூகத்தை கட்டியெழுப்புவதற்கான ஜனாதிபதி செயலணி, கொவிட் 19 அமைச்சரவை செயலணி, கிழக்கு மாகாண தொல்பொருள் உரிமங்களை முகாமைத்துவம் செய்வதற்கான ஜனாதிபதி செயலணி, கல்வி செயற்பாடுகள் தொடர்பான ஜனாதிபதி செயலணி, பொருளாதார மறுசீரமைபப்பு செயலணி,  என்பன தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வியடதானத்துக்குள் உள்வாங்கப்பட்டுள்ளன. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயதானத்துக்குள் காணப்பட்ட தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு, தகவல் தொழில்நுட்ப முகவர் நிறுவனம், கணினி அவசரப்பிரிவு என்பன புதிய வர்த்தமானிக்கு ஏற்ப தொழில்நுட்ப அமைச்சின் கீழ் கொண்டு செல்லப்பட்டுள்ளன. மஹபொல நிதியம், வர்த்தக அமைச்சின் கீழ் கொண்டு செல்லப்பட்டுள்ளது.