இவ் உலகை விட்டு பிரிந்தார் சந்திரமதி குழந்தைவேல்..

இவ் உலகை விட்டு பிரிந்தார் நியூஸ்பெஸ்ட்டின் சந்திரமதி குழந்தைவேல்...

by Staff Writer 22-11-2020 | 9:02 PM
Colombo (News 1st) நியூஸ்பெஸ்ட்டின் காலஞ்சென்ற ஊடகவியலாளர் சந்திரமதி குழந்தைவேலின் இறுதிக் கிரியைகள் கண்டி கந்தகெடியவில் நாளைய தினம் (23) இடம்பெறவுள்ளன. அன்னாரின் பூதவுடல் புஞ்சி பொரளையிலுள்ள தனியார் மலர்ச்சாலையில் தற்போது அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. கண்டி - புசல்லாவையில் குழந்தைவேல் மற்றும் சாந்தா தம்பதியினருக்கு முதலாவது பிள்ளையாக 1991ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் திகதி சந்திரமதி பிறந்தார். புப்புரஸ்ஸ தமிழ் வித்தியாலயத்தில் எட்டாம் தரம் வரை கல்வி பயின்ற அன்னார், புசல்லாவை இந்து தேசிய கல்லூரியில் உயர்தரம் வரை கல்வி கற்று பாடசாலை சமூகத்தினர் மத்தியில் நன்மதிப்பை பெற்றிருந்தார். தமிழகத்தில் நாமக்கல் SSM கல்லூரியில் சந்திரமதி தனது பட்டப்படிப்பை பூர்த்தி செய்தார். தினக்குரல் பத்திரிகை மூலம் ஊடகத்துறைக்குள் பிரவேசித்த சந்திரமதி, 2016ஆம் ஆண்டு நியூஸ்பெஸ்ட் ஊடகவியலாளராக இணைந்து கொண்டார். சந்திரமதி அதே ஆண்டில் சுப்ரமணியம் சரவணனை கரம்பிடித்து இல்லற வாழ்க்கையை ஆரம்பித்தார். கடந்த 4 ஆண்டுகளாக எம்மோடு பயணித்த சந்திரமதி, ஒரு செய்தியாளராக மற்றும் செய்தி தயாரிப்பாளராக மக்களின் பிரச்சினைகளை வௌிக்கொணர்வதில் மிகுந்த ஆர்வத்துடன் செயற்பட்டதுடன், மக்கள் சக்தி திட்டத்தின் மூலம் மக்களின் பிரச்சினைகளை தேடிச்சென்றார். சிறந்த பண்பினால் அனைவர் மனதையும் கவர்ந்திருந்த சந்திரமதி, துன்பப்படும் மக்களின் துயர்துடைக்கும் சக்தியின் நிவாரண யாத்திரைகளிலும் பங்கேற்றிருந்தார். இறுதி வரை ஊடத்துறைக்காக பணியாற்றிய சந்திரமதி குழந்தைவேல் திடீர் சுகயீனம் காரணமாக நேற்று முன்தினம் நள்ளிரவு இவ்வுலகை விட்டுப் பிரிந்தார். பிறப்பெடுத்த உயிர்களுக்கெல்லாம் இறப்பு உண்டு. ஆயினும் உன் இறப்பை சாதாரணமாக கடந்து போக எம் நெஞ்சம் மறுக்கிறது. சகோதரியே! உன் ஆத்மா சாந்தியடையட்டும்...