by Bella Dalima 20-11-2020 | 1:03 PM
Colombo (News 1st) தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் புலனாய்வு அதிகாரிகளால் கண்காணிக்கப்படவுள்ளன.
குறித்த பகுதிகளில் சுகாதார நடைமுறைகள் உரிய முறையில் பின்பற்றப்படுகின்றனவா என்பது தொடர்பில் ஆராயும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
சிலர் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்ட விதிமுறைகளை மீறி செயற்படுகின்றமை தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
கொழும்பு மற்றும் களுத்துறை மாவட்டங்களில் புலனாய்வு கண்காணிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகவும் இதன்போது, சிலர் குழுக்களாக தனிமைப்படுத்தல் ஊரடங்கு விதிமுறைகளை மீறும் வகையில் செயற்படுகின்றமை கண்டறியப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
ஆகவே, தொடர்ந்தும் இந்த பகுதிகள் ட்ரோன் கமராக்களினூடாக கண்காணிக்கப்படுமெனவும் இதுவரை சுமார் 117 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவௌியை பேணாத குற்றச்சாட்டில் நேற்று 46 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
இதுவரை 358 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.