நல்லூர் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் தோல்வி

நல்லூர் பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் தோல்வி

by Staff Writer 19-11-2020 | 6:29 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - நல்லூர் பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. பிரதேச சபையின் மொத்த 20 உறுப்பினர்களில் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 08 வாக்குகளும் எதிராக 11 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில், நல்லூர் பிரதேச சபையின் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மேலதிக 03 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டதாக பிரதேச சபை தவிசாளர் சா.யாகமூர்த்தி தெரிவித்தார். இதேவேளை, கிளிநொச்சி - கரைச்சி பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் 7 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தலைமையில் இன்று காலை 9.30 மணிக்கு அமர்வு ஆரம்பமானது. 2021 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் தவிசாளரால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டதுடன், பிரதேச சபை உறுப்பினர்களின் கருத்துக்களும் கேட்டறியப்பட்டன. இதனையடுத்து, நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 20 வாக்குகளும் எதிராக 13 வாக்குகளும் அளிக்கப்பட்டன. 35 உறுப்பினர்களைக் கொண்ட கரைச்சி பிரதேச சபையின் அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டம் 07 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இதேவேளை, முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. மொத்தமாகவுள்ள 24 உறுப்பினர்களில் 20 பேர் இன்றைய அமர்வில் கலந்துகொண்டதுடன், மூன்று உறுப்பினர்கள் சமூகமளிக்கவில்லை. இந்த நிலையில், வாக்கெடுப்பின்றி ஏகமனதாக அடுத்த ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டதாக கரைதுறைப்பற்று தவிசாளர் எஸ்.தவராசா தெரிவித்தார்.

ஏனைய செய்திகள்