கோப் குழுவின் செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பம்

கோப் குழுவின் செயற்பாடுகள் நாளை முதல் மீண்டும் ஆரம்பம்

by Staff Writer 19-11-2020 | 4:50 PM
Colombo (News 1st) தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கோப் (COPE) குழுவின் செயற்பாடுகளை நாளை முதல் மீண்டும் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, COVID-19 சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி கூட்டங்களை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கோப் குழுவின் தலைவர் சரித்த ஹேரத் தெரிவித்துள்ளார். COVID-19 தொற்று நிலைமை காரணமாக கோப் குழுவின் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன. இந்த நிலையில், நாளைய தினம் கோப் குழுவில் முன்னிலையாகுமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர், பெருந்தெருக்கள் அமைச்சின் கணக்காளர் மற்றும் அதனுடன் தொடர்புடைய திட்ட முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர்கள் உள்ளிட்ட 07 அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன்போது, மத்திய அதிவேக வீதி தொடர்பான ஆய்வு மற்றும் கொள்வனவு நடவடிக்கைகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட கணக்காய்வு அறிக்கை ஆராயப்படவுள்ளதாக கோப் குழுவின் தலைவர் சரித்த ஹேரத் கூறியுள்ளார்.