கொரோனா தொற்று: 233 பேர் இன்று அடையாளம் காணப்பட்டனர்

by Staff Writer 18-11-2020 | 9:05 PM
Colombo (News 1st) கொரோனா தொற்றுக்குள்ளான 233 பேர் இன்று அடையாளம் காணப்பட்டதையடுத்து நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 18,308 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 5 பேர் நேற்று உயிரிழந்துள்ளதுடன் மொத்தமாக 66 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த சில நாட்களில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்களாவர். கொரோனா தொற்றுக்குள்ளாகி நேற்று உயிரிழந்த 5 பேரும் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களே. இந்த 5 பேரில் 3 பேர் தங்களின் வீடுகளிலேயே உயிரிழந்துள்ளனர். கொழும்பு 10-ஐ சேர்ந்த 65 வயதான ஆண் உயர் குருதி அழுத்தம் காரணமாக உயிரிழந்துள்ளார். தெமட்டகொடையை சேர்ந்த 82 வயதான ஆண் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். அத்துடன், இரத்மலானையை சேர்ந்த 69 வயதான பெண்ணொருவரும் கிருலப்பனையை சேர்ந்த 71 வயதான மற்றுமொரு பெண்ணும் வீட்டில் இருந்த நிலையில் உயிரிழந்துள்ளனர். உயர் குருதி அழுத்தம், நீரிழிவு நோயுடன் கூடிய கொரோனா தொற்று காரணமாகவே இவர்கள் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, கொழும்பு - 02 ஐ சேர்ந்த 81 வயதான பெண்ணொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.