மன்னாருக்கு புதிய அரசாங்க அதிபர் நியமனம்

மன்னார் மாவட்டத்திற்கு புதிய அரசாங்க அதிபர் நியமனம்

by Staff Writer 16-11-2020 | 2:47 PM
Colombo (News 1st) மன்னார் மாவட்டத்திற்கு புதிய அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ள நந்தினி ஸ்டான்லி டி மெல் இன்றைய தினம் தனது கடமைகளை ஆரம்பித்தார். மன்னார் மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபரை வரவேற்கும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது. இதன்போது மன்னார் மாவட்ட செயலகத்தினால் புதிய அரசாங்க அதிபருக்கு வரவேற்பு வழங்கப்பட்டது. நிகழ்வில் சர்வமத தலைவர்கள், மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன், பிரதேச செயலாளர்கள், திணைக்கள உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது அரசாங்க அதிபர் சர்வமத தலைவர்களின் ஆசியுடன் தனது கடமைகளை ஆரம்பித்தார். மன்னார் மாவட்டத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, மாவட்டத்தில் நிலையான அபிவிருத்தியை ஏற்படுத்தி, இன மத நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதே தனது நோக்கம் என நந்தினி ஸ்டான்லி டி மெல் குறிப்பிட்டார்.