டயானா, அரவிந்தகுமாருக்கு ஆளுங்கட்சியுடன் ஆசனங்கள்

டயானா கமகே, அருணாச்சலம் அரவிந்தகுமாருக்கு ஆளும் கட்சி பகுதியில் ஆசனங்கள்

by Staff Writer 16-11-2020 | 2:10 PM
Colombo (News 1st) டயானா கமகே மற்றும் அருணாச்சலம் அரவிந்தகுமார் ஆகியோருக்கு பாராளுமன்றத்தில் ஆளும் கட்சி பகுதியில் ஆசனங்களை ஒதுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சியின் கோரிக்கைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சியின் பிரதம கொறடா ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சபாநாயகரிடம் இதற்கான கோரிக்கையை முன்வைத்துள்ளார். இதேவேளை, 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு ஆதரவளித்த எதிர்க்கட்சியின் ஏனைய ஆறு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிர்க்கட்சி பகுதியிலேயே தனியாக ஆசனங்களை ஒதுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ குறிப்பிட்டார். எனினும், தமது கட்சியின் நிலைப்பாட்டிற்கு மாறாக 20 ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்திற்கு ஆதரவளித்த ஐக்கிய மக்கள் சக்தியின் 09 பேருக்கும் ஆளும் தரப்பில் ஆசனங்களை ஒதுக்குமாறு எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்‌ஷ்மன் கிரியெல்ல, சபாநாயகரிடம் கடிதம் ஒன்றினூடாக கோரிக்கை விடுத்திருந்தார். 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு கடந்த மாதம் 21 ஆம் திகதி நடத்தப்பட்டதுடன், திருத்த சட்டத்திற்கு ஆதரவாக ஐக்கிய மக்கள் சக்தியின் 09 உறுப்பினர்கள் வாக்களித்தனர். டயானா கமகே அருணாச்சலம் அரவிந்தகுமார் ஈஷாக் ரஹ்மான் பைசல் காசிம் H.M.M. ஹாரிஸ் M.S.தௌபீக் நசீர் அஹமட் A.A.S.M.ரஹீம் M.M.M. முஷாரப் ஆகியோர் திருத்த சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.