சிரேஷ்ட ஊடகவியலாளர் சிட்னி சந்திரசேகர காலமானார்

by Staff Writer 14-11-2020 | 12:17 PM
Colombo (News 1st) சிரேஷ்ட ஊடகவியலாளரும் கலைஞருமான சிட்னி சந்திரசேகர தனது 61 ஆவது வயதில் இன்று காலமானார். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் இன்று காலை காலமானார். சிட்னி சந்திரசேகர, நியூஸ்ஃபெஸ்ட்டின் ஆலோசகராகவும் செயற்பட்டுள்ளார். தேசிய தொலைக்காட்சியில் தமது சேவையை ஆரம்பித்த அவர், கொழும்பு ஆனந்தா கல்லூரியின் பழைய மாணவராவார். பல பிரபல்யமான நாடகங்களை தயாரித்துள்ள சிட்னி சந்திரசேகர, நாட்டின் தொலைக்காட்சித்துறையில் முக்கிய பதவிகளையும் வகித்துள்ளார். Nidhikumba Mal,Kumarayaanani, Piyaambana Ashawaya மற்றும் A9 போன்ற நாடகங்களை அவர் இயக்கியுள்ளார். இலங்கையில் பாடல் எழுதும் கலையில் மாற்றத்தை ஏற்படுத்திய சிட்னி சந்திரசேகர, பல படைப்புகளின் மூலம் பிரபல்யமடைந்தார். ''எஸ் தெக்க பியான நிதாகன்ன மட்ட பே, அனந்தயன் ஆ தரு குமரா, எழுந்திடு ஶ்ரீலங்கா, பிரேம தடயம,மே ஆதரயய்'' போன்ற பாடல்களும் அவர் வடித்த பாடல்களில் பிரபல்யமானவை. அன்னாரின் பூதவுடல் ஜயரத்ன மலர்சாலையில் நாளை (15) மாலை வரை மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும். இறுதிக்கிரியைகள் நாளை மாலை 5.30 க்கு பொரளை மயானத்தில் இடம்பெறவுள்ளன.