by Bella Dalima 14-11-2020 | 1:40 PM
Colombo (News 1st) அமெரிக்க அதிபர் பதவிக்கு தகுதி பெற்றுள்ள ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன், நேற்று அரிசோனா மற்றும் ஜோர்ஜியா மாநிலங்களையும் வென்றுள்ளார்.
இதன்மூலம், அமெரிக்க தேர்தலின் இறுதி தேர்தல் சபை வாக்குகள் எண்ணிக்கையை பொருத்தவரை ஜனநாயகக் கட்சிக்கு கிடைத்த வாக்குகள் 306 ஆக உயர்ந்துள்ளது.
வட கரோலினாவை வென்ற டொனால்ட் ட்ரம்பின் குடியரசுக் கட்சிக்கான தேர்தல் சபை வாக்குகள் 232 ஆக உயர்ந்துள்ளது.
இரண்டு இறுதி மாநிலங்களின் முடிவுகளும் தேர்தல் தினத்திற்கு ஒன்றரை வாரங்களுக்குப் பிறகு அறிவிக்கப்பட்டுள்ளன.
ஜோர்ஜியாவில் பைடனின் வெற்றி அவரது வாக்கு எண்ணிக்கையில் 16-ஐ கூடுதலாக சேர்த்தது, 2016 தேர்தல்களில் டொனால்ட் ட்ரம்ப் 306 தேர்தல் தொகுதி வாக்குகளைப் பெற்றபோது, அப்போதைய ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் 232 தொகுதி வாக்குகளை வென்றிருந்தார்.
2016 இல் ட்ரம்ப் வென்ற ஜோர்ஜியா, அரிசோனா, மிச்சிகன், பென்சில்வேனியா மற்றும் விஸ்கான்சின் ஆகிய ஐந்து மாநிலங்கள் இம்முறை பைடனை நோக்கி திரும்பியுள்ளன.
நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜோ பைடன் ஜோர்ஜியாவில் வெற்றி பெற்ற முதல் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஆவார். கடைசியாக 1992 ஆம் ஆண்டில் பில் கிளிண்டன் வெற்றி பெற்றிருந்தார்.