பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்குமாறு பசில் ராஜபக்ஸவுக்கு அழைப்பு

by Staff Writer 13-11-2020 | 3:07 PM
Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பசில் ராஜபக்ஸவுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர்கள் 19 பேரின் கையொப்பத்துடன் கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதாதர அபிவிருத்தியை கருத்திற் கொண்டும் பொதுஜன பெரமுனவின் முழுமையான ஒத்துழைப்பை நாட்டிற்கு பெற்றுக் கொடுக்கவும் பசில் ராஜபக்ஸ பாராளுமன்ற உறுப்பினராக பிரவேசிக்க வேண்டும் என அந்த கடிதத்தில் குறிப்பிப்பட்டுள்ளது. பசில் ராஜபக்ஸவினாலேயே 4 வருட குறுகிய காலத்திற்குள் உள்ளூராட்சி மன்ற தேர்தல், ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் ஆகிய 3 தேர்தல்களிலும் வெற்றி பெறக்கூடிய அரசியல் கட்சியை உருவாக்க முடிந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பசில் ராஜபக்ஸவை தவிர ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தொடர்பில் சிந்திக்க முடியாதெனவும் குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர்களான, சம்பத் அத்துகோரள மேஜர் பிரதீப் உந்துகொட அங்கஜன் ராமநாதன் காதர் மஸ்தான் டொக்டர் உபுல் கலப்பத்தி அஷோக்க பிரியந்த சஞ்சீவ எதிரிமான்ன சஹன் பிரதீப் விதான அகில சாலிய எல்லாவள நாலக பண்டார கோட்டேகொட அமரகீர்த்தி அத்துகோரள வசந்த யாப்பா பண்டார டப்ள்யூ.டி.வீரசிங்க எச்.நந்தசேன குமாரசிறி ரத்னாயக்க மேஜர் சுதர்ஷன தெனிபிடிய ராஜிகா விக்ரமசிங்க நிபுண ரணவக்க கபில அத்துகோரள ஆகியோர் கையொப்பமிட்டு கடிதம் அனுப்பியுள்ளனர். குறித்த கடிதத்தை பசில் ராஜபக்ஸவிடம் ஒப்படைத்துள்ளதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர கருத்து வௌியிடுகையில்,
அவர் பாராளுமன்றத்திற்கு பிரவேசிக்க வேண்டும். எமது கட்சியை ஸ்தாபித்து 2  ஜனாதிபதிகளையும் உருவாக்கியுள்ளார். உள்ளூராட்சி, பொதுத் தேர்தல் உள்ளிட்ட தேர்தல்களில், அவரின் தலைமையில் வெற்றி பெற முடியுமானால், அவர் பாராளுமன்றத்திற்கு பிரவேசித்து அமைச்சு பதவியை பொறுப்பேற்று நாட்டு மக்களுக்கு சேவையாற்ற வேண்டும். ஐக்கிய தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகள் அவர் தொடர்பில் அச்சமடைந்தே அவரை விமர்சிக்கின்றனர். அவர் பாராளுமன்றத்திற்கு வருகை தருவதை எதிர்பார்க்கின்றேன். நாட்டின் அபிவிருத்தியை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு அவரின் சேவை எமக்கு அவசியமாகின்றது.
என தெரிவித்துள்ளார்.