by Staff Writer 13-11-2020 | 12:29 PM
Colombo (News 1st) Drone மற்றும் ஹெலிகொப்டர்களை பயன்படுத்தி முகத்துவாரம் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கையில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 07 பேர் இன்று (13) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கண்காணிப்பு நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இந்த சோதனை நடவடிக்கையில் பொலிஸார் விசேட அதிரடிப்படையினர் மற்றும் விமான படையினரும் இணைந்துள்ளதாக அவர் கூறினார்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடரவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் கூறினார்.
தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வாழும் மக்களை வீடுகளிலேயே தரித்திருக்குமாறு, விதிமுறைகளை பின்பற்றுமாறும் வேண்டுகோள் விடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவ தேவைகளுக்காக மாத்திரம் அனுமதிப்பத்திரமின்றி பயணிக்க முடியுமே தவிர வேறு தேவைகளுக்காக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து வௌியேற முடியாது என பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தப்பட்டுள்ள முகத்துவாரம் பகுதியில் ட்ரோன் கெமராக்களின் ஊடாக கண்காணிக்கப்பட்ட பின்னர் விதிமுறைகளை மீறிய 15 பேர் நேற்று மாலை கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.