பல்லேகலயில் பயிற்சி முகாம்

பல்லேகலயில் பயிற்சி முகாம்

by Staff Writer 12-11-2020 | 9:07 AM
Colombo (News 1st) இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் நாளை (13) முதல் பல்லேகலயில் பயிற்சிகளில் ஈடுபடவுள்ளனர். இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிக்கையூடாக இதனை தெரிவித்துள்ளது. தென்னாபிரிக்காவிற்கான கிரிக்கெட் விஜயம் மற்றும் லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரை இலக்காக கொண்டு இந்த பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. சுகாதார பாதுகாப்புடன் பயிற்சிகள் நடைபெறவுள்ளன. இதில் 22 கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொள்ளவுள்ளதுடன், லங்கா பிரீமியர் லீக் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் பயிற்சிகளின் நிறைவில் ஹம்பாந்தோட்டை நோக்கி பயணிக்கவுள்ளனர். தென்னாபிரிக்காவிற்கு கிரிக்கெட் விஜயம் மேற்கொள்ளவுள்ள வீரர்கள் எதிர்வரும் 22 ஆம் திகதி கொழும்பிற்கு மீள திரும்பவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. இலங்கை அணி அடுத்த மாதம் 17 ஆம் திகதி தென்னாபிரிக்காவுக்கு கிரிக்கெட் விஜயம் மேற்கொள்ளவுள்ளனர். டிசம்பர் 20 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை பினோனியில் பயிற்சிகள் இடம்பெறவுள்ளன. பொக்ஸிங் டே தினத்தில் தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நடைபெறவுள்ளது.